யுத்த காலத்தில் பாதுகாப்புக்கே பங்கர் அமைக்கப்பட்டது-மஹிந்த ராஜபக்ஷ



பாதுகாப்பு நோக்கத்துக்காகவே நிலத்துக்குக் கீழ் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெறும் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே இந்த நிலத்துக்குக் கீழ் அறைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் நேற்று கொழும்பு அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையுடன் இணைந்ததாக நிலத்துக்குக் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு மாளிகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.



இந்த கட்டடம் நிலத்துக்குக் கீழால் இரண்டு மாடிகளும், நிலத்துக்கு மேலால் இரண்டு மாடிகளும் அமையப் பெற்றுள்ளன. ஒரு மாடியின் பரப்பளவு 3 ஆயிரம் சதுர அடிகளாகும். நான்கு மாடிகளும் 12 ஆயிரம் சதுர அடிகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நான்கு மாடிகளுக்கும் இலத்திரனியல் இறக்கு ஏறு தளங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், முழு மாளிகையும் குளிரூட்டப்பட்டு 24 மணி நேரமும் இடைவிடாது செய்பட்டு வந்துள்ளது.

இந்த கட்டிடத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரையில் சுரங்கப் பாதையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிகள் முடிவடையாது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் நிர்மாணப்பணிகள் இராணுவத்தினரைக் கொண்ட விசேட படைப் பிரிவு ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்கள் ஒவ்வொன்றினதும் அகலம் 4 அடிகள். இதன் சுவர்களுக்கு பலமான கம்பிகள் போடப்பட்டுள்ளன. கூரைக்குப் போடப்பட்டுள்ள கொங்கிரீட்டின் அகலமும் 4 அடிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கட்டிடத்தில் போடப்பட்டுள்ள தளபாடங்கள் யாவும் இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments